உத்தரபிரதேச மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல் நிலைய அதிகாரிகள் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றினர். இதில் ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் 195 கிலோவும் பதுக்கி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடத்தல்காரர்களின் குற்றத்தை நிரூபித்து, தண்டனை அறிவித்து பறிமுதல் செய்த கஞ்சாவே சமர்ப்பிக்குமாறு மதுரா காவல்துறையினருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை சார்பில் கஞ்சாவின் மாதிரியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்க முடியாது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 581 கஞ்சாவையும் காட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதற்கு உத்தரபிரதேசத்தின் மதுரா காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 581 கிலோகிராம் கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறினர். இந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும்.