திருப்பூரில் பரிதாபம்.! வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு.. 

website post (49)

திருப்பூர் மாநகராட்சி சார்பில், வாறுகால் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழியால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவன்  உயிரிழப்பு. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில்  குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. வீடுகளை ஒட்டி சாக்கடை கட்ட தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது. 

இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே சாக்கடை கட்ட தோண்டிய குழியின்  இடைவெளியை கடக்க அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அபிராம்(16) குழியின் மீது மரப்பலகையை போட முற்படும் போது பலமிழந்திருந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான். 

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறபடுத்தி மாணவனின் உடலை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.