அதிமுக நிர்வாகி மீது வன்முறை தாக்குதல் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

eps

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடந்திருப்பதாகவும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

காவல்துறை தயக்கம்

மதுரை மாவட்டம் கருவனூரில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு‌.பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கொடூரமாக தாக்கியும், அவரது வீட்டை சூறையாடியும், அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையை மேற்கொண்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் அவ்வூர் கோயிலுக்கு வந்து சென்றபின்பு இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய-நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதும் மிகுந்த கண்டணத்துக்குரியது.

அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் அரசு

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத வகையிலும், சாமானியர்கள் அஞ்சும் வகையிலும்  அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது‌. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதுடன்,  திரு.பொன்னம்பலம் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.