விராட் கோலி மீண்டும் ரன் குவிப்பார் - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

virat

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் விராட் கோலி ஒரு சாம்பியன் வீரர், அவர் மீண்டும் பழைய பார்முக்கு வருவார் என நேற்றைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் மூன்று இலக்கம் ரன்களை கூட எடுக்க முடியவில்லை. அது போக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்தத் தொடரில் நான் எந்த பேட்ஸ்மேன்களின் பார்மை பற்றியும் கண்டு கொள்ளப் போவதில்லை. காரணம் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது. நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைத் தான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

தற்போது விராட் கோலிக்கு ரன் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேனாக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி ஃபார்ம் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.