சிறுமிகளிடம் கன்னித்தன்மை சோதனை.. கொந்தளித்த நாராயணன் திருப்பதி.!

virginity

ஆளுநர் குற்றச்சாட்டு

அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பழிவாங்கும் வகையில் சமூக நலத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இரண்டு விரல் பரிசோதனை

ஆனால், அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை என்றும் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தடை செய்யப்பட்ட இரண்டு விரல் பரிசோதனை என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

இதனால், அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து முதலமைச்சருக்கு, தான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாகவும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் ஆளுநரின் பேட்டி அடிப்படையில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றி விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொந்தளித்த நாராயணன் திருப்பதி

இந்த சம்பவம் குறித்து அண்மையில் ஆளுநர் குறிப்பிட்டிருந்ததையடுத்து, தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இந்த கொடூரத்தை அரங்கேற்ற சொன்னது யார்? எனவும், குழந்தைகளை கொடுமைப்படுத்தியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

"சிதம்பரம் தீக்ஷிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க  'இரட்டை விரல் சோதனை' செய்து கொடுமைக்கு உட்படுத்தியது தமிழக அரசு என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதோடு, இந்த குரூர முறையை கையாண்ட இந்த அரசு இனியும் நீடிக்க வேண்டுமா என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. மனிதத் தன்மையற்ற இந்த குற்றத்தை செய்தவர்களும், செய்ய தூண்டியவர்களும் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் POCSO சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டும். பெண் குழந்தையை பெற்றவர்கள் இந்த அரசை ஆதரிப்பார்களேயானால், தங்களின் மனசாட்சியை அடகு வைத்தவர்களாகவும், பெற்ற பெண் பிள்ளைகளை மறந்தவர்களாகவும் கருதப்படுவார்கள்.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பிறப்பு உறுப்பில் காயங்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் கை விரல்களை வைத்து பரிசோதனை செய்வதே, இரட்டை விரல் சோதனையாகும். அந்த காயம்பட்ட  இடத்தில் கை விரல் பட்டால்  மேலும் வலி அதிகமாகும். இந்த இரட்டை விரல் சோதனை என்பது விஞ்ஞான பூர்வமானது அல்ல என்பதோடு, குழந்தைகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 2013 ம் வருடமே இந்த இரட்டை விரல் சோதனையை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, இந்த சோதனை தனிநபர் அந்தரங்கத்தை மீறுவதோடு, உடலளவில், மனதளவில் காயப்படுத்தி  அவர்களின் கண்ணியத்திற்கு கேட்டை விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

குரூர புத்தி கொண்ட மிருகங்கள்

ஆனால், குழந்தை திருமணம் நடைபெற்றதாக அரசு அதிகாரிகளின், சமூக நலத்துறை அதிகாரிகளின் பொய் புகாரின் பேரில், சட்டத்திற்கு புறம்பாக சிறு குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது  சிதம்பரம் நடராஜர் கோவிலை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற தி மு க அரசின் வெறியை, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஹிந்து விரோத செயலுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் தி மு க செல்லும் என்பதை இந்த கொடூரம் உணர்த்துகிறது. தற்கொலை செய்து கொள்ள முயன்ற அளவிற்கு இது போன்ற ஒரு கொடுமையை குழந்தைகளுக்கு செய்யத் துணிந்த குரூர புத்தி கொண்ட மிருகங்கள் இனியும் அதிகாரத்தில், பணியில் நீடிக்க வேண்டுமா?  இதற்கு காரணமானவர்களும், துணை நின்றவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இது குறித்து ஆளுநர் எழுதிய கடிதத்திற்கு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதில் கூறாதது ஏன்? இந்த கொடூரத்தை அரங்கேற்ற சொன்னது யார்? குழந்தைகளை கொடுமைப்படுத்தியது ஏன்? சட்டத்தை மீறி செயல்பட அனுமதி அளித்தது யார்? தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.