முதலமைச்சர் யாரை எதிர்க்கிறார்.. யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.. நாராயணன் திருப்பதி கேள்வி.!

cmvsnar

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதையடுத்து, தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் என்று அதிமுக மற்றும் பாஜகவினருக்கு வீடியோ மூலமாக எச்சரிக்கை விடுத்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் யாரை எதிர்க்கிறார்? யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   

இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை

“"தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 வருடத்திற்கு முன் உள்ள பழைய புகார். மன ரீதியாக, உடல் ரீதியாக பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருதய நோயை உருவாக்கியிருக்கிறார்கள்" : தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அமலாக்கத்துறையின் கடமை

கடந்த மே16-ம் தேதியன்று, செந்தில் பாலாஜி மீது புதிய விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்க சொன்னது உச்ச நீதிமன்றம். மேலும், இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயாயின் உச்சநீதி மன்றமே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமலாக்கத்துறை தன் விசாரணையை தொடரலாம் என்றும், அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டு எப்போது பொது வெளியில் வந்து விட்டதோ அது குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டியது அமலாக்கத்துறையின் கடமையாகும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது பாசம்?

யாரை எதிர்க்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள்? உச்சநீதி மன்றத்தையா? யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் திரு.ஸ்டாலின் அவர்கள்? உச்சநீதி மன்றத்திற்கா? இருதய நோயை எப்படி ஒரே நாளில் உருவாக்க முடியும்? 10 வருடத்திற்கு முன் உள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்க சொன்னது உச்சநீதி மன்றம் என்று தெரிந்தும் அநியாயமான தொல்லை கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் திரு. ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உச்சநீதி மன்றத்தையே எச்சரிக்கும் அளவிற்கு அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது பாசம்?”என்று குறிப்பிட்டுள்ளார்.