தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் - அமைச்சர் முத்துசாமி

minister muthusamy

இலக்கு நிர்ணயிப்பதில்லை

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான முத்துசாமி தற்போது மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையையும் கவனித்து வருகிறார். இந்நிலையில், ஈரோட்டில் கலைஞர் நூற்றாண்டு  விழாவில் பங்கேற்ற அமைச்ச முத்துசாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை என்றும் கூறினார். 

சிறிய பிரச்சனையை அரசியலாக்குகின்றனர்

மேலும், டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ள நிலையில், அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எங்கோ ஓரிரு இடங்களில் தெரியாமல் நடந்துள்ள சிறிய பிரச்சினைகளை கூட அரசியல் காரணங்களுக்காக பூதாகரமாக்கி கூறி வருவதாக கூறியுள்ளார்.

நிலத்தைக் கையகப்படுத்தாத அ.தி.மு.க.

அதேபோல், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளதாகவும், இந்த திட்டத்தில் முழுமையாக நிலத்தைக் கையகப்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு விட்டுச் சென்றுவிட்ட நிலையில், அதை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளிடம் பேசி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்திக்கடவு - அவினாசி திட்டம்

மேலும், சில இடங்களில் பைப்புகள் மற்றும் தண்ணீர் அளவிடும் கருவி திருட்டுப்போய் உள்ளதாகவும், பணிகள் முடிவடைந்ததும், காவலர்கள் நியமிக்கப்பட்டு, அத்தகைய திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.