மகளிர் உரிமைத்தொகை விவகாரம் - ஸ்டாலினை விமர்சித்த இளைஞர் கைது.. என்ன நடந்தது.!

website post (7)

 

மகளிர் உரிமைத் தொகை பற்றி மீம் வீடியோவை பதிவிட்ட வாய்ஸ் ஆப் சவுக்கு ட்விட்டர் பக்கத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதையடுத்து, சவுக்கு சங்கரும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் ட்விட்டரில் காரசாரமாக மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன் தினம் தாக்கல் செய்தார். அதில் வரும் செப்டம்பர் மாதத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான 15-ம் தேதி தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மீம் வீடியோ

தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருந்த நிலையில், சவுக்கு சங்கரும் இத்திட்டத்திற்கு தகுதியான பெண்களை முதலமைச்சர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் எப்படி தேர்வு செய்வார்கள் என்பது குறித்து நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்த நகைச்சுவை காட்சியை பகிர்ந்து விமர்சித்திருந்தார்.

புகார்

சவுக்கு சங்கர் பகிருந்திருந்த திரைப்பட நகைச்சுவை காட்சி முதலமைச்சர், நிதியமைச்சர் மட்டுமில்லாது தமிழ்நாட்டு பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரியும், அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்கக்கோரியும் உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொட்டுப்பாருங்க. என்ன ஆகுதுன்னு

இதற்கு "தொட்டுப்பாருங்க. என்ன ஆகுதுன்னு" என ட்வீட் செய்திருந்தார் சவுக்கு சங்கர். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வாய்ஸ் ஆஃப் சவுக்கு ட்விட்டர் பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் சென்னை போலீசாரால் இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலவே நானும் இந்த வீடியோவை ட்வீட் செய்கிறேன் என்னை கைது செய்யுங்கள் என்றும் சென்னை காவல் ஆணையர் ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்படுவதாகவும் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சென்னை போலீசின் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்திருந்தார்.

பொதுவாழ்க்கையை விட்டுவிடுகிறேன்

மேலும் இந்த கைதுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மற்றும் சென்னை காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது பற்றாக்குறையான பட்ஜெட்டை யாரும் விமர்சிக்க கூடாது என்று அவர் நினைப்பதகாவும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பதிவிட்டிருந்தார். சவுக்கு சங்கரின் இந்த ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 

இந்த கற்பனைவாதியின் சித்தப்பிரம்மையை நான் புறக்கணித்துவிட்டேன், ஆனால் இது 100 சதவீத பைத்தியக்காரத்தனம். அதனால், நான் எதிர்வினையாற்றுவேன் என கூறி உள்ள பிடிஆர், இந்த வீடியோவை நான் பார்க்கவில்லை, இது குறித்து புகாரும் செய்யவில்லை, இது பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட டிவிஏசி எழுத்தரின் மாநில பட்ஜெட் மீதான விமர்சனம் என்னை தொந்தரவு செய்ய தொடங்கும்போது நான் பொதுவாழ்க்கையை விட்டுவிடுகிறேன் என்று பிடிஆர் தெரிவித்துள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் "நீங்கள் இறுதியில் அமைச்சர் பதவியை விட்டு விலகுவீர்கள். நீங்கள் எந்த வேலைக்கும் தகுதியற்றவர், அமைச்சர் பதவியை மட்டும் விட்டுவிடுங்கள். மேலும் நீங்கள் ஒரு புனிதர் அல்ல" எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.