பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்கள்.! 

delifimdd

மல்யுத்த வீரர்கள் போராட்டம் 

இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

மீண்டும் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம்

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் தொடங்கினர்.

கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர். 

நீதிக்கான போராட்டம் தொடரும்

கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று பஜ்ரங் புனியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அடுத்ததாக, ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணி மற்றும் தோனிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார். மேலும் அதில், குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது மரியாதை கிடைப்பதில் மகிழ்ச்சி என்றும், எங்களைப் பொறுத்தவரையில் நீதிக்கான போராட்டம் தொடரும் என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்கள்
  
இந்தநிலையில், தாங்கள் பாடுபட்டு வென்ற பதக்கங்கள் இனி எங்களுக்கு தேவையில்லை என பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். எங்களை மகள் என அழைக்கும் பிரதமர் மோடி, எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இதுவரை கேட்கவில்லை. துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் என்று கூறி பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். 

அந்தவகையில், தாங்கள் பெற்ற ஆசிய கோப்பைகள், தங்கம் வெள்ளி பதக்கங்களை கங்கையில் வீசுவதற்கு சாக்சி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ஹரித்வாரில் குழுமியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.