மணிப்பூர் விவகாரம்..பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி.!

chief

மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுதியளித்திருக்கிறார். 

சர்ச்சையான வீடியோ

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் இரு சமூக குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் வன்முறையாக மாறியது. இதற்கு மத்தியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மே மாதம் நிகழ்ந்த சம்பவத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பொதுவெளியில் அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் மனு தாக்கல்

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசியலமைப்பு தோல்வி அடைந்தது

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அங்கு நடக்கும் சம்பவங்கள் மொத்தமும் அரசியலமைப்பு தோல்வி அடைந்ததைக் காட்டுவதாகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருசில கருத்துக்களை நீதிபதி தெரிவித்துள்ளார். 

நாங்கள் நீதி வழங்குவோம்

மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் என்றும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளிக்காமல் உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் புகார் கொடுக்கவில்லை என்றாலும் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.