வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர்.. சீமான் கண்டனம்..

Seem-Resz-02

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை திமுக அரசு ஆட்டு மந்தைகள் போல அடைத்து வைக்கிறார்கள், ஓட்டு கேட்டு போனால் வீட்டில் யாரும் இருப்பதில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அடைத்து வைக்கப்படும் மக்களுக்கு மூன்று வேலை அசைவ சாப்பாடு, பணம் மற்றும் பொழுது போக்கிற்காக திரைப்படங்களை திரையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், களத்தில் நடப்பதை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வெளியே தள்ளிய திமுகவினர், அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது; ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைகளை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆடு, மாடுகளைப்போல மக்களை அடைத்து வைத்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பறித்து, மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும் ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது. திமுக குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள் என்பதை தேர்தல் ஆணையம் இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், ஊடகவியளாளர்களை தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைந்து கைது செய்ய வேண்டுமென, நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.