விஷத்தை கக்கும் ஆளுநர் எல்லை மீறி பேசுகிறார் -  வைகோ காட்டம்

vaiko vs rn ravi

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது

இந்நிலையில் முதலமைச்சரின் இந்த வெளிநாட்டு பயணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.  உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர் தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருவதாகவும், நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது என்றும் கூறியுள்ளார். மேலும்,  முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும் எனவும், உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதல் விரோதி

ஆளுநரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சரின் இந்த வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி விஷத்தைக் கக்கி இருப்பதாகவும்,  ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும் என்றும் இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என காட்டமாக கூறியுள்ளார்.