ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மீண்டும் மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு தரப்பு வாதம்
தமிழகத்தில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி தடை விதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வழக்கு தொடரந்தது. அந்த வழக்கானது இன்று ஜூலை 03-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ஆன்லைன் விளையாட்டால் வேலையில்லா இளைஞர்கள், தின கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், ஒரு போலீஸ் என 32 மாய்த்துக்கொண்டனர் என்றும், பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே சட்டம் இயற்றப்பட்டுள்ளது, சட்டம் இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்கள் தரப்பு
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்ட விளையாட்டு, அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலை செய்து கொள்வதாக கூறி அரசு சட்டம் இயற்றியுள்ளது என்றும், இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் மறுப்பு
இறுதியில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மீண்டும் மறுப்பு தெரிவித்து, ஜூலை 13-ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.