நீளும் சனாதன சர்ச்சை.. ஆ.ராசா மீது டெல்லியில் புகார்.!   

snatanam

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சனாதனம் பற்றியான பேச்சு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முன்னதாக, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனாவை எப்படி ஒழிக்க வேண்டுமோ அதேபோல்தான், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கடந்த ஆக-2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியிருந்தார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், சனாதனத்தை எய்ட்ஸ், தொழுநோயுடன் ஒப்பிட்டு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியிருந்தார். இது பாஜகவினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் வழக்கரிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் புகார் அளித்திருக்கிறார்.

சனாதனத்தை மோசமான உதாரணங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக ஆ.ராசா மீதான புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டதைவிட மேலாக எய்ட்ஸ், தொழுநோயுடன் ஒப்பிட்டு ஆ.ராசா பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.